2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 733 மில்லியன் பேர் பட்டினியை எதிர்கொண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உலகின் சமீபத்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை (SOFI) அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் 733 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர், இது உலகளவில் பதினொரு பேரில் ஒருவர் மற்றும் ஆபிரிக்காவில் ஐந்தில் ஒருவர் என்பதற்கு சமம்.

உலகளாவிய பட்டினி அளவுகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக ஒரே மாதிரியாக உள்ளன மற்றும் 2019 ஐ விட சுமார் 152 மில்லியனாக உள்ளன.

உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முன்னொருபோதும் இல்லாத விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகளுக்கு இடையே, 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில், பலரால் தங்களுக்கு தாங்களே உணவளிக்க முடியவில்லை என்பது முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF), ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இந்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த முகமைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சமாதானத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச ஒழுங்கின் ஒரு பகுதியாகும்; அவை அமெரிக்கா இன்னும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடும் நோக்கங்களுக்கு ஆதரவு தூண்களாக செயல்படுகின்றன. ஆகவே அவர்களின் கவனம் வங்கிகளையும் உலகளாவிய உணவுப் பெருநிறுவனங்களையும் சிறந்த முறையில் செழிப்பாக்கக்கூடிய நிதியியல் “தீர்வுகளின்” மீதே உள்ளது.

ஜூலை 24 அன்று பிரேசிலில் நடைபெற்ற பட்டினி மற்றும் வறுமைக்கு எதிரான ஜி 20 (G20) உலகளாவிய கூட்டணி பணிக்குழு அமைச்சர்கள் கூட்டத்தின் பின்னணியில் ஐ.நா முகமைகள் இந்த அறிக்கையை வெளியிட்டன, நவம்பர் 2024 இல் உலகின் 20 பணக்கார நாடுகளின் தலைவர்கள் ஜி 20 உச்சிமாநாட்டிற்காக சந்திக்கும் அதே நேரத்தில் கூட்டணியின் அதிகாரப்பூர்வ தொடக்கம் நடைபெற உள்ளது. பட்டினி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பரோபகாரம் (philanthropy), மனிதாபிமானம் மற்றும் சமூக அக்கறை என்ற போர்வையில் வணிக வாய்ப்புகளாக பார்க்கப்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது.

ஜூலை 2, 2024 அன்று ஜிம்பாப்வேயின் முட்ஸியில் உள்ள ஒரு உணவு மையத்தில் தயாரிக்கப்பட்ட கஞ்சியை குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். ஜிம்பாப்வேயில், எல் நினோவால் (El Nino) தூண்டப்பட்ட வறட்சி மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வருகிறது, மேலும் குழந்தைகள் மிகவும் ஆபத்தில் உள்ளனர். [AP Photo/Aaron Ufumeli]

உலகின் பட்டினியால் வாடும் மக்களில் பாதிக்கும் அதிகமானவர்களுக்கு ஆசியா தாயகமாக இருக்கின்ற அதேவேளையில், ஆபிரிக்காவில் மிக மோசமான நிலைமைகள் நிலவுகின்றன, அங்கு பட்டினியை முகங்கொடுக்கும் மக்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது (20.4 சதவீதமாக). 2023 ஆம் ஆண்டில், ஆசியாவில் 384.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர், ஆபிரிக்காவில் 298.4 மில்லியனுடன் ஒப்பிடும்போது. 2022 முதல் 2023 வரை, மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான துணைப் பகுதிகளில் பட்டினி அதிகரித்தது.

இந்த அறிக்கை பட்டினி பிரச்சினைக்கும் அப்பால் சென்று, பரந்த உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச் சத்தின்மை ஆகியவற்றிற்கு கவனத்தை ஈர்க்கிறது.

2020 ஆம் ஆண்டில், COVID-19 பெருந்தொற்று நோய்க்கு மத்தியில், மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது, குறிப்பாக ஆபிரிக்காவில் 58 சதவீத மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், மொத்த எண்ணிக்கை கணிசமாக மாறவில்லை, 2.33 பில்லியனைச் சுற்றி அல்லது உலகின் 8.1 பில்லியன் மக்களில் 29 சதவீதமாக உள்ளது. 864 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்தனர், ஒரு நாள் முழுவதும் அல்லது சில நேரங்களில் அதற்கு மேல் உணவு இல்லாமல் இருந்தனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவுகள், குறைவதற்கு பதிலாக, 2008-09 உடன் ஒப்பிடத்தக்க அளவுகளுக்கு அதிகரித்துள்ளன. 2007-2008 இல் உணவு வர்த்தக நிறுவனங்களின் பதுக்கல், தனியார் முதலீட்டு நிதி ஊகவணிகம் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் குற்றகரமான நடவடிக்கைகள் காரணமாக உணவு விலைகள் உயர்ந்த அந்த நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடந்தனர் என்பதை அந்த அறிக்கை கூறத் தவறிவிட்டது. மக்கள் பட்டினியால் மடிந்தனர், உணவுக் கலகங்கள் மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவை ஏழை மற்றும் முன்னேறிய நாடுகளில் வெடித்தன, இது ஹைட்டிய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் 2011 அரபு வசந்தத்திற்கு பங்களித்தது.

தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030 வாக்கில் 582 மில்லியன் மக்கள் நீண்டகாலமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் பாதி பேர் ஆபிரிக்காவில் இருப்பார்கள் என்று அறிக்கை எச்சரிக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் 2030 க்குள் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 2, “பூஜ்ஜிய பட்டினியை” அடைவதற்கான எந்தவொரு கருத்தையும் அழிக்கின்றன. 2015 இல் நிறுவப்பட்ட பூஜ்ஜிய பட்டினி இலக்கு, “பசியை முடிவுக்குக் கொண்டுவருதல், உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊட்டச்சத்தை உறுதி செய்தல் மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்” என்று கருதப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஆரோக்கியமான உணவு என்பது உணவுப் பற்றாக்குறையைத் தாண்டி, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களை பாதிக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.உணவு விலைகள் குறித்த புதிய தரவு மற்றும் முறைகளை வரைந்து, 2.8 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் 2022 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாது என்பதை அறிக்கை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், அங்கு 71.5 சதவீத மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாது, உயர் வருமானம் கொண்ட நாடுகளில் 6.3 சதவீதத்துடன் ஒப்பிடும்போது. இந்த நிலைமை ஆபிரிக்காவில் கணிசமாக மோசமடைந்துள்ளது, அதே நேரத்தில் இது மற்ற பிராந்தியங்களில் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளுக்கு கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமையான யுனிசெப் சமீபத்தில் வெளியிட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உணவு முறைகள் குறித்த ஒரு அறிக்கையில், உலகளவில் நான்கு இளம் குழந்தைகளில் ஒருவர் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உணவைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உயிர்வாழும் வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. பல குழந்தைகள் ஐ.நா.வால் “பசிப் பிரச்னைகள்” எனப் பெயரிடப்பட்ட பாலஸ்தீனம், ஹைட்டி மற்றும் மாலி போன்ற இடங்களில் வாழ்கின்றனர். அங்கு வரும் மாதங்களில் உணவு கிடைப்பது மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 100 நாடுகளில் 181 மில்லியன் குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு உணவுக் வகைகளுக்கு மேல் உட்கொள்வதில்லை, வழக்கமாக அரிசி, மக்காச்சோளம் அல்லது கோதுமை போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுடன் பாலை உட்கொள்கிறார்கள்.

அனைத்து வயதினரிடமும் அதிகரித்துள்ள அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்து குறைபாடு இணைந்து இருப்பதை SOFI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மெலிந்த மற்றும் எடை குறைவு குறைந்துள்ள நிலையில், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ளது, வயது வந்தோரின் உடல் பருமன் அளவு 2012 இல் 12.1 சதவீதத்திலிருந்து 2022 இல் 15.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக அளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் / அல்லது பதப்படுத்திகள், அத்துடன் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வசதியான கடைகளால் விநியோகிக்கப்படும் சர்க்கரை பானங்கள் ஆகியவற்றைக் கொண்ட பதப்படுத்தப்பட்ட மற்றும் அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு வியத்தகு அதிகரிப்பு காரணமாக அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வு நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, ஆபிரிக்காவின் கிராமப்புறங்களிலும் வளர்ந்து வருகிறது, மற்றவற்றுடன், விவசாய உற்பத்தியின் இயந்திரமயமாக்கல் மற்றும் மற்றும் விவசாயத்திற்கு புறம்பான வேலைவாய்ப்புகளிலிருந்து அதிக வருமானம், நீண்ட வேலை நேரங்கள் மற்றும் பயண நேரம் ஆகியவற்றால் இது பயன்படுத்த தயாராக உள்ள உணவை மிகவும் பிரபலமாக்கியுள்ளது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (The International Food Policy Research Institute - IFPRI), சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (small-and medium enterprises - SMEs) மற்றும் பிரமாண்டமான உணவு நிறுவனங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய உணவு விநியோகச் சங்கிலிகளில் உணவு பதப்படுத்தல் மற்றும் நவீன விநியோகம் மற்றும் பொதியாக்கல் அமைப்புகளின் விரைவான விரிவாக்கத்தின் பின்னணியில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதைக் காட்டும் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியுள்ளது.

பெரு உணவு நிறுவனங்கள் ஆபிரிக்காவிலும் பிற இடங்களிலும் மிகவும் தானியங்கி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்துள்ளன, இந்தோனேசியாவின் இந்தோஃபுட் (Indofood ) பொதியாக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் நைஜீரியாவில் உள்ள இந்தோமி (Indomie) ராமன் நூடுல்ஸ் போன்ற சாப்பிட தயாராக உள்ள தயாரிப்புகளை தயாரிக்கிறது.

பதப்படுத்துதல், மொத்த விற்பனை, போக்குவரத்து மற்றும் சில்லறை உணவு விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள நடுத்தர நிறுவனங்கள் ஆபிரிக்காவில் கிராமப்புற தொழிலாளர்களில் 20 சதவீதத்தினரையும், நகர்ப்புற தொழிலாளர் தொகுப்பில் 25 சதவீதத்தையும் பணியமர்த்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆபிரிக்க நாடுகள் சர்க்கரை வரிகளை சுமத்துவதற்கான எந்தவொரு முயற்சிகளுக்கும், ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு முத்திரை குத்துதல் மற்றும் ஆரோக்கியமற்ற அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான தேவையை குறைப்பதற்காக பள்ளிகளில் ஆரோக்கியமற்ற உணவுகளை விநியோகிப்பதற்கான தடைகள் ஆகியவற்றிற்கு வலுவான சந்தை சக்தியைக் கொண்ட பெரு உணவு நிறுவனங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.

வளைகுடா நாடுகளின் நிலம் மற்றும் நீர் அபகரிப்பு நடவடிக்கைகளின் தாக்கம் பற்றி SOFI அறிக்கை எதுவும் கூறவில்லை, ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில், பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவுப் பொருட்களைத் தேடி அலைகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு காலத்தில் பழங்குடி விவசாயிகளை ஆதரித்த சூடானின் மிகவும் வளமான பிராந்தியமான கார்ட்டூம், நைல் மற்றும் வடக்கு மாநிலங்கள் - விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, குறிப்பாக 2008 உணவு நெருக்கடி மற்றும் 2013 இல் வணிக நட்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு. பெரும்பாலும் அமெரிக்க நிறுவனமான கார்கில் போன்ற வேளாண் வணிக நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலமாக, ஏற்றுமதிக்காக மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட உணவு உற்பத்திக்கு இந்த நிலம் மாற்றப்பட்டுள்ளது.

வாழ்வாதார விவசாய-மேய்ச்சல் பொருளாதாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஆபிரிக்காவின் கொம்பு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் பிற பிராந்தியங்களில், உரிமையாளர், கால்நடைகள் மற்றும் கால்நடைகளின் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் வன்முறை நில அழிப்பு மற்றும் வளர்ந்து வரும் ஏற்றுமதி சந்தைக்காக கால்நடைகளை இராணுவமயமாக்குவதற்கு வழிவகுத்தது, அத்துடன் உள்ளூர் மக்களின் இடம்பெயர்வு மற்றும் ஆதரவற்ற நிலைக்கு வழிவகுத்தது, அவர்கள் பெரும்பாலும் நகரங்களின் புறநகரில் அல்லது கிராமப்புறங்களில் சேரிகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பிரம்மாண்டமான முகாம்கள், அவை அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான முகாம்களை விட சற்று அதிகமானவை. சூடானில், கால்நடைகளை இராணுவமயமாக்குவதால் அதிகரித்துள்ள இன மற்றும் பழங்குடி போட்டிகள் டார்புர் மற்றும் கோர்டோபானில் நடந்து வரும் இராணுவத்திற்குள்ளான உள்நாட்டுப் போரில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்.

உணவு விலை பணவீக்கத்தால் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மோசமடைந்து வருவதாகவும், மோதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகள் ஆகியவை அடிக்கடி மற்றும் கடுமையானதாக மாறி வருவதாகவும் ஐ.நா முகமைகளின் அறிக்கை விளக்குகிறது. இவற்றில் எதுவுமே பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள், வேளாண் வணிக பெருநிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் நடவடிக்கைகள், ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் பன்னாட்டு அமைப்புகளின் பாத்திரம் மற்றும் மெத்தனமான அரசாங்கங்களின் உடந்தை ஆகியவற்றை விவரிக்கும் ஸ்தூலமான வார்த்தைகளில் விளக்கப்படவில்லை. (அரிதான) நிதி வெற்றியாளர்களையும் (பல) தோல்வியாளர்களையும் அடையாளம் காண்பது இன்னும் குறைவு.

நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் மற்றும் அதிகாரத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதல் மட்டுமே மனிதகுலம் முகங்கொடுக்கும் ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்பதை இது தெளிவுபடுத்தும். பகுத்தறிவு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பயன்படுத்தப்படும் புதிய உற்பத்தி நுட்பங்கள் உலகிற்கு உணவளிக்க முடியும், பட்டினி, வறுமை மற்றும் வயல்களில் கடின உழைப்பு ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், மனிதயின தேவை, சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கு செய்வதற்கும், சமூகத்தின் பரந்த செல்வ வளம் அனைத்தையும் உற்பத்தி செய்கின்ற சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் அணிதிரட்டுவது இதற்கு அவசியமாகும்.

Loading